கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
வசீகரமான இளைஞர் அமிஷ் திரிபாதி. குழந்தை போன்ற கவர்ச்சிகரமான முகம். அலட்டிக்கொள்ளாத சுபாவம். சிவபெருமானை வைத்து ஆங்கிலத்தில்


வசீகரமான இளைஞர் அமிஷ் திரிபாதி. குழந்தை போன்ற கவர்ச்சிகரமான முகம். அலட்டிக்கொள்ளாத சுபாவம். சிவபெருமானை வைத்து ஆங்கிலத்தில் மூன்று நாவல்கள் எழுதிவிட்டார். ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் முதல் நாவல் "இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுஹா'வை இருபது பதிப்பாளர்கள் நிராகரித்தார்களாம்.
லேன்ட்மார்க்கின் சிடி சென்டரில் அமிஷ் தன் புதிய நாவல் "தி ஓத் ஆஃப் தி வாயுபுத்ராஸ்' நாவலை வெளியிட வந்தபோது, பிரம்மாண்டமான அந்தப் புத்தகக் கடை நிரம்பி வழிந்தது. 90 சதவிகிதம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் நூலுக்குச் செய்தது போலவே, "வாயுபுத்ராஸýக்கும் ஒரு குறும்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. பாட்டு சோனு நிகம், இசை தப்லா கலைஞர் ஜாகிர் ஹுசைனின் சகோதரர் பஸல் குரோஷி. ஓர் ஐந்து நிமிடத்தில் புத்தக அறிமுகப் படம். நூல் வெளியீடு என்றால் நம்மைப் போல பொன்னாடை போர்த்தி, வளவளவென்று ஆளாளுக்கு அறுக்கிற சமாசாரமே இல்லை. அமிஷ் வெளியிட, வெஸ்ட்லேன்ட் பதிப்பக கௌதம் பத்மநாபன் வாங்கிக்கொண்டு, முதல் வரிசையிலிருந்த தம் நாற்காலிக்குத் திரும்பிவிட்டார். அவ்வளவுதான். அப்புறம் வாசகரிடமிருந்து கேள்விகளுக்கு அமிஷின் பதில்கள்:
""உங்கள் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களா?''
""ஆமாம். கரன் ஜோஹர் எடுக்க முன்வந்திருக்கிறார். நான் வசிப்பது பாலிவுட்டின் ஆதிக்கம் மிகுந்த மும்பையில். அதனால் இது தவிர்க்க முடியாதது.''
""நீங்கள் முதலில் நாத்திகராமே! அப்புறம்தான் ரூட் மாறிவிட்டீர்களா?''
""ஆமாம். என் தந்தை ஓர் ஆசிரியர். என் பாட்டனார் ஒரு பண்டிதர். நான் பனாரஸ் ஹிந்து யூனிவர்சிடி மாணவன். 1993}இல் நடந்த குண்டு வெடிப்புகள் என்னை யோசிக்க வைத்தன. நல்லதை நடு நிலையில் எடுத்துச் சொல். இல்லை என்றால் இரண்டு பக்கமும் இருக்கிற தீவிரவாதிகள் குரலும் அழிவும்தான் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றார் என் தந்தை. ஆலன் ஜேகப்பின் உபநிஷத் கதைகள், வென்டி டோனிகான் ரிக் வேத விளக்கம் எல்லாம் படித்தேன். பகவத் கீதையும் படித்தேன். அப்புறம்தான் எழுத வேண்டும் என்ற துருதுருப்பு வந்தது.
""முதல் புத்தகம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட தோல்வி மனப்பான்மைக்கு என்ன காரணம்?''
""இளைஞர்களுக்கு மதம் விருப்பமான சப்ஜக்ட் அல்ல என்று நிராகரித்தார்கள். புத்தகம் வெளியாகி, லட்சக்கணக்கில் இளைய தலைமுறையினர் வாங்கத் தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. இரண்டாவது நாவலும் சிவபெருமானை வைத்துத்தான் எழுதினேன் - "த சீக்ரட் ஆஃப் த நாகாஸ்' அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. இது மூன்றாவது..''
""உங்கள் மனத்தில் தங்கிவிட்ட நிகழ்ச்சி ஏதாவது?''
""நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்றோம். அன்னை மேரி சேலை கட்டிக்கொண்டு குழந்தை ஜீஸஸýடன் காணப்பட்டார். இந்தியக் கடவுளை வணங்குவது மாதிரிதான் எனக்குத் தோன்றியது. ஒரு வித்தியாசமும் என் மனசுக்குத் தெரியவில்லை. இப்போதும் என் வீட்டில் பூஜை அறையில் சிவபிரான், ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு, காபா, ஜொராஷ்டிரர், எல்லா படங்களும் இருக்கின்றன. எல்லாவற்றையும் தொழும் மனோபாவம் எனக்கு இருக்கிறது. ஏன், பல கடவுள்களை வணங்கும் இந்துக்கள் எல்லோருக்கும் இது இருக்கும்.
""ஏன் சிவபெருமானைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?''
""அவர் தீயவற்றை அழிக்கிறார். அதனால்!''
அடுத்த நாவல் எழுத அமிஷுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் அட்வான்ஸôகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன கதை, என்ன தலைப்பு எதுவும் கேட்கவில்லையாம்.
அமிஷின் படைப்புகளில், கடவுள்கள் எல்லாம் சாதாரண மனிதர்களாக வருகிறார்கள். சேத்தன் பகத்தின் "த்ரி இடியட்ஸ் வந்ததும்', ஆகா, என்ன சிந்தனை என்ன படைப்பு என்று வியந்தது உண்மை. அப்புறம் அவர் படு சினிமாத்தனமாக எழுதிக் குவிக்கத் தொடங்கியதைப் படித்துவிட்டு, "போதும்டா சாமி' என்று ஒதுங்கிவிட்டதும் உண்மை. அமிஷ் திரிபாதி வந்து, சேத்தன் பகத்தின் நாற்காலியில் இப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு
விட்டார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...